புதன், 26 மே, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வுக்கு இடமளித்த அமெரிக்காவுக்கு எதிராக சிறிலங்கா அரசு வகுத்துள்ள திட்டம்?

ஜீ-15 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுள்ள சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச,புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் அமெரிக்காவுக்கு சரியான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜீ - 15 அமைப்பு தலைமை பதவியை பயன்படுத்தவேண்டும் என்று சிறிலங்கா அரசு உயர் மட்டத்தினர் மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



இது பற்றி தெரியவருவதாவது:


ஜீ - 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பெரும்பாலனவை அமெரிக்காவுக்கு எதிரானவை ஆகும். இந்த அமைப்பின் தலைமை பதவியை வகித்த ஈரான் அரச தலைவரிடமிருந்து இம்முறை சிறிலங்கா அரசதலைவர் பெற்றுக்கொண்டுள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ஜீ - 15 அமைப்பின் தலைமை பதவியை 2012 ஆம் ஆண்டுவரை வகிக்கவுள்ளார்.


புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறிலங்காவுக்கு அழுத்தம் வழங்குவதற்கு முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்கா இம்முறை ஜீ - 15 அமைப்பு தலைமை பதவியின் ஊடாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்பு மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


அதாவது, புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களின் கருத்துக்களையும் சிறிலங்கா அரசு செவி மடுக்கவேண்டும் என்று அமெரிக்க அரசு விடுத்த அறிக்கைக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பேச்சு நடத்தவேண்டும் என்று ஜீ - 15 அமைப்பின் சார்பில் அமெரிக்காவுக்கு மகிந்த கோரிக்கை விடுக்கவேண்டும் என்றும் -


நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கு அமெரிக்காவில் இடமளித்தமைக்கு பதிலடியாக பாகிஸ்தானிலுள்ள தலிபான் தலைவர்களை பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அனுமதி வழங்கவேண்டும் என்றும் -


மகிந்தவுக்கு சிறிலங்கா அரசு தரப்பின் உயர் மட்டத்தினர் ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக