சனி, 4 டிசம்பர், 2010

நீயும் நானும் பேசுவது தமிழ்தான்
நாம் இருவருமே தமிழர்கள் தான்
இதைவிட நமக்குள் என்ன ஒற்றுமை?


போராட்டங்கள் மட்டுமே
வாழ்வாகி போனது எனக்கு
போராட்டமா அப்படி என்றால்
என்கிறாய் நீ...


சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் நாங்கள்
வெந்துவிட்ட இதயங்கள்..
தொலைந்துவிட்ட சொந்தங்கள்...
சந்ததியே வேரறுந்து ...
நிம்மதியை தானிழந்து ..
இத்தனையும் இழந்தாலும்
இழக்கவில்லை நம்பிக்கை..


கூடிழந்த பறவைகளாய் நாங்கள்
கூடி வாழும் குருவிகளாய் நீ
ஆனாலும் என்னவோ
உன்மீது எனக்கு துளியேனும்
பொறாமை வரவில்லை
நீயேனும் நன்றாக இருக்கிறாய்
அது போதும் .


ஒரு வேளை சோற்றிற்கும் ,
ஒண்ட ஓரமாய் சிறிது இடத்திற்கு
நாங்கள் சிந்தியக் குருதிகளும் , உணர்வுகளும் ,
கத்தலும் , கதறலும் ,மொத்தமாய்
இந்த முற்கம்பி வேலிக்குள்ளேயே
புதைந்து போகட்டும்
வேண்டாம் இனியும்
எந்த எதிரிக்கும் இந்த அவல நிலை.!


நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே .!


தமிழ் அன்னை ஈன்றெடுத்த
மக்கள் தானே நாம்!
இதிலாவது நமக்குள்
ஒற்றுமை ஒன்று
இருந்துவிட்டு போகட்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக