வியாழன், 13 மே, 2010

வெற்றிப்பரொளியாய்

நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பாடலைப்போல தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. உயரமான மரக்கிளைகளை ஊடுருவி நிலவொளி வருகிறது. இரவு நீண்டு செல்கிறது. அந்த மனிதர் இன்னும் விழித்திருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலையால் அவர் இன்னும் தூங்கவில்லை. அவர் தொடர்ந்து தமது மண்ணின் விடுதலைக்காக உழைத்தார். இன்றுவரை, இந்த வினாடிவரை அறிவியல் பூர்வமான அவருடைய சிந்தனையும், ஆக்கப்பூர்வமான லட்சியமும், அடக்கமான உழைப்பும், அகலமான பார்வையும், ஆழமான அன்பும் கொண்ட ஒரு மகத்தான மனிதர், நமது தாய் மண்ணின் விடுதலைக்காக,
 தமிழ் மண்ணின் மானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் கரங்களில் சுமந்த கருவிகள், பகைவனின் பகை முறித்தது. அவரின் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதி முறித்தது. ஆனால் நமக்குள் உள்ள ஒற்றுமையை அவரால் உண்டாக்க முடியவில்லை. அது நம் மனங்களுக்குள் இருக்கும் மாசு என்பதை அவர் உணர்ந்திருந்தார். இயக்கம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பதை நம்மைக் காட்டிலும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஓடாத நதி, குட்டையாகி விடும். பாயாத மின்சாரம், இருளடைந்துவிடும். அவர் நதியைப் போலவும், மின்சாரத்தைப் போலவும் ஓய்வென்பது அறியாமல் உழைக்கும் ஒப்பற்ற தலைவராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நமக்கான சிறப்பு தன்மை வாய்ந்த ஒரு வரலாற்றை உருவாக்கித்தர வேண்டும் என்பதிலே அவர் அளவில்லா ஆசைக் கொண்டிருக்கிறார். ஆசை, அழிவிற்கு காரணம் என புத்தன் சொன்னான். ஒரு கவிஞன் சொன்னான். ஆசைப்படாமல் இருக்க, புத்தன் ஆசைப்பட்டான் என. எம் தலைவனுக்குக்கூட ஆசை இல்லை தான். ஆனால் எமது மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவரின் குருதியோட்டங்களில் குவிந்து கிடந்தது. அவர் இரத்த நாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் ஓடும் அணுக்கள் அளவிட முடியாத ஆற்றலை அவரின் மூளைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது. மூளையிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் செயலும் நமக்கான விடியலைக் குறித்தே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர் நிம்மதியாக உறங்கி எத்தனை ஆண்டுகள் ஆனதோ? அவர் மகிழ்வோடு சிரித்து எத்தனை காலங்கள் ஆனதோ? அவரின் கவலை எல்லாம் தமது நாட்டின் விடுதலை ஒன்றுதான். அந்த தலைவன் உயிரைவிட மேலாக விடுதலையையும், தன்மானத்தையும் உயர்த்திப்பிடித்தார். கவரிமான் பரம்பரைக்கு இவன் ஒரு கோனார் உரை. எப்படி மானத்தோடு வாழ்வது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. சிங்கள பேரினவாத அரசு ராசபக்சே சகோதரர்களின் பேயாட்டம் ஏதோ எம்மை தோற்கடித்ததைப்போன்ற ஒரு பிரம்மையை பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்திய-பார்ப்பனிய பனியா கூட்டாட்சி எமது மக்களை கொன்று போட்டதை வெற்றியாக கருதிக் கொண்டிருக்கிறது. பரிதாபத்திற்குரிய அவர்களை நாம் நினைத்து கவலைப்படுகிறோம். வெற்றி என்பது எங்கிருந்து தோன்றுகிறது என்பதை அவர்கள் உணராதவர்களாக இருக்கிறார்கள். இதுவரை வரலாற்றில் மக்கள் என்றுமே தோற்றது கிடையாது. மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் மண்மேடாய் ஆனபோதும் மக்கள் மகத்தான வெற்றிப்போரொளியாய் இந்த மண்ணில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்களை தோற்கடித்ததாய் இருமாப்போடு பேசும் இவர்களுக்கு வரலாறு மீண்டுமாய் பதில் சொல்லும். வியெட் - பாக் கார்டு வேடிக்கையானது. குரங்குகள் கூச்சல், பறவைகளின் இன்னிசை நாள்முழுவதும் கேட்கும். பார்வையாளர்களுக்கு சோளப்பொறி. வேட்டை முடிந்து இறைச்சி. நீல நிறம் மலைகளை தெளிவான நீரோடையை நிதானமாக ரசிக்கலாம். இனிக்கும் ஒயினும், சூடான தேனீரும் சுவைக்கலாம். நிலாவின் அழகையும் வசந்தத்தின் எழிலையும் ரசித்து மகிழ்வதற்கு எதிர்ப்பு வெற்றியடைந்த பிறகு நாங்கள் மீண்டும் வருவோம் என்பதை எமது பகைவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்கிறோம். நாம் சந்தித்திருப்பது வெறும் எதிர்ப்புத்தானே தவிர, தோல்வி அல்ல. எங்கள் இனம் சூரியனை தலையில் சுமக்க சும்மாடு கேட்கும் இனம். எமது இனம் சுண்டுவிரலில் இந்த பூமியை சுழற்றிப் பார்க்கும் இனம். எமது இனம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழினம். எம்மை ஒழித்து வெற்றிக் கொடி கட்டுவதென்பது, சூரியனை வெட்டிவந்து அடுப்பெறிப்பதற்கு சமமாகும். எம்மை வெற்றிக் கொண்டு அரசாட்சி நீடிப்பதென்பது கடலை உறிஞ்சி காலத்தை கடத்துவதாகும். நாம் வெற்றிப் பெறுவதற்காகவே பிறந்திருக்கிறோம். இந்த நேரத்தில் எமது தேசிய தலைவரிடமிருந்து நமக்கு சொல்லும் அழைப்பு இதுதான். எந்த பொறுப்பையும் நிறைவேற்றி, எந்த துயரையும் சமாளி. எந்த எதிரியையும் முறியடித்து வெற்றிக் கொள் என்பதுதான். ஆகவே, இந்த காலக்கட்டம் நாம் பொறுப்புகளை தோள்மீது சுமக்கும் காலக்கட்டம். துயர்களை அசட்டை செய்து, அதை தூக்கி எறியும் காலக்கட்டத்தில் நம்முடைய போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. லட்சியத்தை அடைவதற்கு நாம் தயக்கம் கொள்ளும் நிலையை கடந்துவிட்டோம். இந்த உலகமே தாங்காத அளவிற்கு நாம் எமது மண்ணை குருதியால் குளிப்பாட்டினோம். அவலக்குரலால் அடக்கினோம். எமது சத்தம் இந்த பிரபஞ்சத்தின் காற்றை கிழித்துப்போட்டது. எமது போராட்டத்தின் பேரொளி வீர விளைவுகளாய் காற்றிலே பதிவு செய்யப்பட்டது. காற்று போகும் திசையெல்லாம் எமது வீரம் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். காற்று நடக்கும் பாதையெங்கும் எமது வீரம் விதைக்கப்பட்டிருக்கும். வீரத்தை எம் குருதியில் பாய்ச்சிய ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவனை நமது இனம் பெற்றிருப்பதே இந்த வரலாற்றில் சிறப்பு தன்மையாகும். ஒருபோதும் வீழ்ந்ததற்காக நாம் கவலைப்பட்டது கிடையாது. ஆனால் எழாமல் இருப்பதற்காகத்தான் கவலைப்பட்டிருக்கிறோம். விடுதலைக்கும் விடுதலைக்கும் சிங்களர்கள் வெளியேறும் வரை பொம்மை அரசுகள் குப்புற விழும் வரை நாம் போர் செய்வோம் போர் வீரர்களே! சகோதரர்களே! முன்னேறுங்கள். வடக்கும் தெற்கும் ஒன்றுகூடினால் அந்த வசந்தத்தைக் காட்டிலும் ஆனந்தம் உண்டோ! என்று நாம் நமது மகிழ்வை கொண்டாடி, கடந்து செல்லும் காலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு எமது இனத்திற்கு இருக்கிறது. உலகெங்கும் நாம் பரந்து விரிந்திருக்கிறோம். மொழியால், உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால் பிரிவால் வலியோடு வாழ்கிறோம். நமக்குள் இருக்கும் பிரிவினை அடையாளத்தை கழற்றி எறிவோம். தமிழர் என்கின்ற ஒரே அடையாளத்தின் கீழ் நம்மை ஒன்றிணைப்போம். ஓய்வறியா ஒரு தலைவனை நாம் பெற்றிருக்கிறோம். அத்தலைவனின் வழிகாட்டுதலும், அத்தலைவனின் நடத்தல்களும் நம்மை நானிலத்தில் சிறக்க வைக்கட்டும். லட்சக்கணக்கில் வாழும் இனங்களுக்கெல்லாம் சொந்த நாடு இருக்கிறது. கோடிக்கணக்கில் வாழும் நாம் அன்னியனுக்கு அடிமையாய் இருப்பது அவமானம் என கருதுவோம். நாம் நம்பியவர்கள் எல்லாம், சொந்த சுகத்திற்காய் நம்மை களப்பலியாக்கினார்கள். அவர்கள் குரல்களில் இருந்த உறுமல் உள்ளத்தில் இல்லை. அவர்கள் புலிகளைப்போல் வேடம் தரித்த பொல்லாத நரிகளாய் நம்மை புரட்டித் தள்ளினார்கள். விடியலுக்காய் ஏங்கும் போது, நமது விழிகளை குருடாக்கிய வீணர்களை, நாம் இங்கே தலைவர்களாக பெற்றோம். ஆனால் நாம் அடிமை விலங்கை உடைத்தெறிய, நமது மனக்குமுறல்களை சீர் செய்ய, மாண்புமிக்க தலைவன் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரோடு கரம் இணைப்போம். அவரோடு இணைந்த வாழ்வு நமது எதிர்காலத்தை வளமாக்கும். அவர் குறித்த தவறான செய்திகளை இருட்டறைக்குள் வைத்து எறித்து சாம்பலாக்குவோம். அவரே நம் தலைவர். அவர் தான் நமது வழிக்காட்டி. நம்மை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்த ஆற்றலாளர் என்பதை நமது மனத்தசைகளில் பதிவு செய்வோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரின் குரல் சம்மட்டியாய் கேட்கும். அடக்கப்பட்டவர்களுக்கு அவரின் செயல் ஆனந்தமாய் இருக்கும். அந்த தலைவனின் பாதையே, நமது பாதை என நம்மை நாம் உறுதிப்படுத்துவோம். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட நமக்கு அந்த மாபெரும் சிந்தனையாளனின் ஆற்றலுக்குள் புதைந்து போனோம். அதுவே நம்மை எழுச்சியோடு வாழ வைக்கும். நமக்கான ஒரு நாடு, நமக்கான ஒரு அரசு. அது தமிழர்களுக்கான அரசு. தமிழர்களுக்கான நாடு. அதை அடையும் வரை ஓய்வு வேண்டாம். உறக்கம் வேண்டாம். தலைவனோடு இணைந்து பணியாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக