சனி, 31 ஜூலை, 2010

மேஜர் பசிலன் ( நல்லையா அமிர்தலிங்கம், முல்லைத்தீவு)

சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை  அள்ளி வழங்கினார்கள்.
சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம்
ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.


ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி கண்ட கண்ட இடங்களில் சுடப்படுவதையும் கண்ணெதிரே கண்டபோதுதான் அகிம்சை தம்மைப் பாதுகாக்காது என தமிழ் மக்கள் புரிந்துகொண்டனர்.


ஆயுதமேந்தி உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.


சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.


உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமுதலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.
தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை.


முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.


கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.


ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளிhயவான்.


தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.


கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் ஸெல் தாக்குதலால்வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.


தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்.....
மேஜர் பசிலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக