சனி, 24 ஜூலை, 2010

இந்த மாதத்தில் ஏழாவது தமிழ் மாணவி தற்கொலை?!

மலையகம் புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. இது இந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஏழாவது தற்கொலையென அறிவிக்கப்பட்டுள்ளபோதும் தற்கொலைக்கான உண்மையான காரணங்கள் அல்லது கொலையா தற்கொலையா என்ற விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டதாக தெரியவில்லை.



நேற்று புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பிரெம்ஐயா சாந்தி என்ற இளம் யுவதியே இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.


புசல்லாவை பிரதேச பாடசாலை ஒன்றின் பழைய மாணவியான இவர் எதிர்வரும் உயர்தரப்பரீட்சைக்குப் பிரத்தியேகமாக தோற்றவுள்ள நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நேற்று பிற்பகல் 2 மணியளவில் குறிப்பிட்ட யுவதியின் சகோதரியின் மகன் வீட்டுக்குச்சென்ற போது வீட்டின் கதவு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பிறகு அக் கதவை திறந்து கொண்டு வீட்டினுள் சென்ற போது குறித்த யுவதி; சேலை ஒன்றினால் கழுத்தில் சுறுக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.


தற்போது யுவதியின் சடலத்தை புசல்லாவை வகுக்கப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக்காலப்பகுதிக்குள் ஏற்கனவே இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலுமொரு மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். இத்தகைய தொடர் தற்கொலை சம்பவங்களால் புசல்லாவை பிரதேச மக்கள் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக