வியாழன், 17 ஜூன், 2010

இலங்கைக்கு படிப்பிக்க வேண்டாம்!

இலங்கைக்கு படிப்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று சர்வதேச நிறுவனங்களுக்கு கடும்தொனியில் தெரிவித்த ஐப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி, ஜப்பானும் உதவி வழங்கும்போது உதவிபெறும் நாடுகள் மீது தான் விரும்புவதை திணிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகாஷி, நேற்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீரிஸை சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது, ஜப்பான் இலங்கைக்கு 39 பில்லியன் ஜப்பானிய யென்னை வழங்கியது என்றும் அரசாங்கத்துடன் பூரண ஆலோசனை நடத்திய பின்னர் அந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


20ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அகாஷி, இலங்கை இதுவரை சமாதானத்தை நோக்கி பெருமளவு முன்னேறியுள்ளது என்றும் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள், நல்லிணக்கம் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறித்து தாம் பாராட்டுவதாகவும் கூறினார்.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக் குறித்து அபிப்பிராயம் கேட்டபோது, இலங்கை உரிய நடைமுறைகளை பின்பற்றும் என்றும் நாட்டுக்கு எது சிறந்ததோ அதனை செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் உலகெங்கிலும் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு அதனால் எவ்வாறு உதவ முடியும் என்று தாம் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் பீரிஸுடன் கலந்து பேசியதாவும் அவர் தெரிவித்தார்.


இதற்கிடையில், அமைச்சர் பேராசியர் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், இலங்கை நீதியானதும் நேர்மையானதுமான ஒரு அரசியல் நடைமுறையை ஏற்படுத்த முயற்சிசெய்கிறது என்றும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்தார்.


இலங்கை கடந்த காலத்தை மறந்து சீராக்கல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை தாம் அகாஷியிடம் விளக்கி கூறியுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக