வியாழன், 16 டிசம்பர், 2010

புலிகள் இல்லாத தேசத்தில் நரிகள் வாலாட்டம்!!!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட
பெறுமதியுடைய நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சிறுமியொருவரை மாத்திரம் அழைத்து தங்கச்சாமான்கள் எங்கே இருக்கின்றன எனத் திருடர்கள் கேட்டுள்ளனர். பின்னர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டாரின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கே.கே.எஸ். வீதியில் உள்ள வீடொன்றுக்கு திருடர்கள் வந்து கதவைத் தட்டியுள்ளனர். எனினும் அவர்கள் அவசரமாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு வேளைகளில் தனியாகச் செல்வோரிடம் இனந்தெரியாத குழுவினர் பணம் பறிப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சங்கானையில் கடந்த சனிக்கிழமை வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுடப்பட்டும் பூசகர்கள் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர். இவர்களில் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக