திங்கள், 3 மே, 2010

தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகள்....!!! நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர் கண்களிலே பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர் எங்களுடன் பேசிக்களித்தீர் போய்விட்டீர். தாயகத்தில் வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத் தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே! ஈரவிழியிங்கு எனக்கின்னும் காயவில்லை. ஊரறியோம் உங்கள் உறவறியோம் தந்தையிட்ட பேரறியோம் ஆனாலும் புகழறிந்து நிற்கின்றோம். நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு மாலையிட்டு நஞ்சணிந்தோம். நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம் தம்பியென்றும் அண்ணன் தங்கையென்றும் எங்களுக்கோர் வம்சவழி தோன்ற வாழ்ந்தோம். ஒன்றாகி வந்த பகை வீழ்த்த வரிசையிட்டுப் போனோமே. செங்குருதி பார்ந்து திசை சிவந்து எதிரிகளின் தங்கிடங்கள் யாவும் தணலிற் கருக்கிய பின் வென்ற களிப்பில் வீடு வந்தோம் அன்றிருந்து இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணவில்லை. கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய் சொல்லுகிறார் உங்கள் தேகம் தூங்காதே! மொட்டாவிழும் பூவினிலே முகம் தெரியும் கல்லறைக்குக் கிட்டவர உங்கள் கண் தெரியும் வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து எம்மை உயிர்ப்பிக்கும். இனிக் கூற்றெனவே வரும்பகையைக் குடிப்போம் வென்றிடுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக