திங்கள், 3 மே, 2010

நொடியில் பிறக்கும் தமிழீழம்

கண்ணீரின் கணம் மனதை அழுத்துகிறது. ஒரு விடியல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டது. ஒரு வசந்தம் வக்கிரகாரர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டது. ஒரு வரலாறு மீண்டும் தொடங்க இந்த நிகழ்வு காரணமாய் போனது. இயக்கங்களின் வரலாற்றில் இது ஒரு சோதனைக்காலம் தான். சோதனை காலம் மட்டும் அல்ல,
 சோதனை களமும் கூட. வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது தனிமனிதனின் ஆவல். தோல்வியை எவரும் நேசிப்பது கிடையாது. ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது. எந்த ஒரு லட்சியவாதிக்கும் தோல்வி என்பது நிரந்தரமாய் இருந்தது கிடையாது. அது வந்துப்போகும் ஒரு விருந்தாளிதான். ஆனால் வெற்றி என்பது மன திசுக்கள். அவை குருதி ஓட்டத்தில் நிரந்தரமாய் குடியேறிய அணுக்கள். ஆகவே எந்த ஒரு லட்சியவாதியும் தோல்வியை குறித்து அதிகம் சிந்தித்தது கிடையாது. தோல்வி தந்த படிப்பிணைகள் அவர்களை வெற்றியை நோக்கி மேலும் விவேகத்தோடு உந்தித் தள்ளவே உறுதுணைப் புரியும். வெற்றி வெறும் அடையாளம் அல்ல, அது வாழ்வின் நிரந்தரம். வெற்றிக்காக அவர்கள் தம்மை இழக்க எந்த நிலையிலும் தயாராக இருக்கிறார்கள். மரணத்திலிருந்து விளையும் வெற்றி நிரந்தரமாய் இந்த மண்ணில் தங்கிவிடும். ஆலம் விதைகள் இந்த மண்ணில் புதைந்து, அழிந்துபோனதின் அடையாளம்தான் விழுதுகள் பரப்பி, அது விண்ணோக்கி அன்னார்ந்து இருக்கிறது. ஆலம் விழுதுகள் மரத்தை தாங்குகிறதா? அல்லது மரம் விழுதுகளை தாங்குகிறதா? என்றெல்லாம் நாம் யோசிக்க முடியாது. இந்த மரத்திற்கும், விழுதிற்கும் விதைதான் காரணமாய் இருந்தது. அது மண்ணில் விழுந்து மடிந்ததா? மரம் என்கின்ற அடையாளத்தை இந்த மனிதர்களுக்கு விட்டுச் சென்றது. நாம் விதைகளை தேடி நிலத்தைக் கீறிக் கொண்டிருக்க வேண்டாம். மரத்திலிருந்து பாடத்தை மட்டும் கற்றுக் கொள்வோம். விடுதலைப்போராட்டமும்கூட, வீரர்களை புதைத்தே நமது விடுதலையை பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்டுவோம். வெற்றி என்பது எளிதில் கிடைப்பது அல்ல. எளிதில் கிடைப்பது வெற்றியும் அல்ல. போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதே வெற்றியாகும். போராடி பெற்ற வெற்றியே பழமைகளை புரட்டிப் போடுகிறது. வெற்றி என்பது கொடுக்கப்படுவதல்ல, எடுக்கப்படுவது. கடந்த 30 ஆண்டு காலமாக அதை எடுப்பதற்காக களமாடிய மாவீரர்களை மரியாதையோடு, மாண்போடு நினைத்துப் பார்க்கும் தருணத்திற்கு நாம் வந்திருக்கிறோம். தமது வாழ்வை இழப்பதின் மூலமே நமக்கான நாட்டை பெற முடியும் என்கின்ற அளவில்லா நம்பிக்கையின் கருவிகள் நமது மாவீரர்கள். அவர்கள் சூரிய புதல்வர்களாய் காற்றை எதிர்த்து களமாடினார்கள். எந்த நிலையிலும் அவர்களிடம் களைப்பு நெருங்கியது கிடையாது. எந்த நேரத்திலும் அவர்களிடம் தோல்வி பயம் சொந்தம் கொண்டதில்லை. அவர்களுக்குள் வெற்றி என்கின்ற எண்ணத்தைத்தவிர, வேறு ஒரு சிந்தனை தோன்றி நிலைத்ததில்லை. அவர்கள் வெற்றியின் புதல்வர்கள். அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்துதான் நமது பயணம் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்த மே திங்கள் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. உலகத்தின் கரங்கள் கொடூரமாய் எமது உறவுகள் மீது படர்ந்தது. அதிநவீன கருவிகளால் எமது இனம் கருவறுக்கப்பட்டது. கூட்டுச் சேர்ந்து கொலை செய்த ஒரு கூட்டத்திலும் கோழிக்குஞ்சு போல எமது உறவுகள் சுருங்கிப் போனார்கள். நல்லவனைப் போல் நடித்த, நயவஞ்சக துரோகங்கள் தொடர்ந்து அரங்கேறியது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள், மருத்துவமனையிலேயே சிதைக்கப்பட்டார்கள். பாதுகாப்பு வளையம் என்று அறிவித்துவிட்டு, அதை நோக்கி கொத்துக் குண்டுகள் சீறி பாய்ந்தது. அதிநவீன ஆயுதங்களோடு மாந்தத்தை அழிக்கும் மகத்தான வேதியியல் பொருட்கள் எல்லாம் எம் உறவுகளின் உடல்மீது சோதித்தறியப்பட்டது. அம்மா என்று கதறும் குரல், எழுவதற்கு முன்னாலேயே குண்டுகளின் அழுத்தத்ததால் அமுங்கிப்போனது. உரக்க அழக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. எம்மை காப்பாற்றுங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புத்தனின் தேசமும், காந்தியின் தேசமும் கூடி நின்று கொலை கூட்டமாய் கொக்கரித்தது. அங்கே சமாதான புறா சமையல் அறையில் கறியானது. அங்கே காந்தியம் ரத்தம் வழியும் உதடுகளோடு உரக்க பேசியது. புத்தனின் கரங்களில் தமிழர்களின் குடல் பூமாலையாய் தொங்கியது. உலக நாடுகள் எமது உறவுகளின் அழிவை நினைத்து சிறிதும் அதிர்ந்து போகவில்லை. வியப்பும் மேலிடவில்லை. அவர்கள் அமைதி காத்தார்கள். ஒட்டு மொத்தமாய் இந்த பூமி பந்தின் செவிகள் செவிடாய் போனது. ஆனால் அநியாயம் சொந்த தமிழ் உறவுகளுக்கு தமிழ் மொழி பேசும் நம்மால் கரம்நீட்டி உதவி செய்ய முடியவில்லை. அங்கே நடப்பது அநியாயம், அநீதி. அதை நிறுத்துங்கள் என்று சொல்வதற்குக்கூட இந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்தலில் எத்தனை தொகுதி வெற்றிப் பெற முடியும் என்கின்ற கணக்குகளுக்கு விடை காணவே நேரம் சரியாக இருந்தது. அந்த நேரத்தில் எமது ரத்த உறவுகள் கணக்கு முடிக்கப்பட்டது. கணப்பொழுது இதை தடுக்க முடியாதா? என்பதற்காக இங்கே களமாடிய வீரமறவர்கள் அதிகாரத்திமிரால் முறியடிக்கப்பட்டார்கள். மறுபுறமோ, ஈழத் தமிழனின் ஓலம் அரசியல் ஆக்கப்பட்டது. அவனின் குருதி தேர்தல் வாக்குறுதியாய் பதிவு செய்யப்பட்டது. எத்தனை உயிர்கள் என்று கணக்கிட முடியுமா? கொக்கரித்து நின்றான் பகைவன். அவனோடு கைக்குலுக்கி மகிழ்ந்தான் துரோகி. இனத்தை அழித்தவனோடு உறவு கொள்வதை மகிழ்வோடு ஊடகங்களுக்கு அறிவித்து மனநிறைவு கொண்டாடிய இவர்கள், எப்படி இனம் காக்க கரம் உயர்த்துவர் என்பதை உணர்வதற்கான மறுசுழற்சி காலம் தான் இந்த நினைவுகூறும் காலம். நினைவுகளிலிருந்து அகற்றாமல், அந்த அநியாயங்களை ஆழமாய் புதைத்து வையுங்கள். மனங்களிலிருந்து அந்த நினைவுகளை கழற்றி எறியாதீர்கள். எந்த நிலையிலும் அந்த அக்கிரமங்களை அணைத்து விடாதீர்கள். அவைகளின் சுடர் உங்கள் மனங்களில் மேலும் மேலும் எரியூட்டப்படட்டும். அந்த செயல்கள் உங்கள் குருதிகளில் அமிலமாய் பாயட்டும். அந்த நிகழ்வுகள் உங்கள் மூளை செல்களில் எரிமலையாய் சிதறட்டும். ஆம்! அங்கிருந்து நம் பயணத்தை தொடங்குவோம். அந்த அநியாய நிகழ்வுகளிலிருந்து நாம் புதிய பாடம் கற்போம். யாருக்கு என்ன மொழி புரிகிறதோ, அந்த மொழியில் பேச முயல்வோம். நாம் முறியடிக்கப்பட்டதாக முட்டாள் தனமான கற்பனையில் இருப்பவர்களுக்கு நமது வீரத்தை அடையாளம் காட்டுவோம். மீண்டும் வருவார் நமது தேசிய தலைவர். அவரின் விரல் அசைப்பு ஒரு நொடியில் தமிழீழம் மலரச் செய்யும். அவரின் புன்னகையிலிருந்து தமிழீழம் பொன்விளையும் பூமியாய் மாறி செழிக்கும். தமிழ் தேசிய தலைவரின் மூளையில் பிறக்கும் சிந்தனையே முழு தமிழினத்தை காத்து நிற்கும். இதுவரை தமிழ் தலைவர் என்று நம்பியவர்கள் எல்லாம் நமது தலையை கழற்றி வைக்க சொல்லிவிட்டார்கள். நமது மூளைகளிலிருந்து முகவரிகளை அழித்துவிட்டார்கள். நமது நடவடிக்கைகளின் அடையாளத்தை எரித்து விட்டார்கள். ஆனால் எமது தேசிய தலைவர் அழிந்தவர்களை புதுப்பித்தார். நமது அடையாளத்தை தோண்டி எடுத்தார். அதை புதுப்பொலிவுடன் உலகிற்கெல்லாம் அறிமுகம் செய்தார். வெறும் வீழ்ச்சியில் எந்த ஒரு நிகழ்வும் முடிவதில்லை. நடைப்பழகும் குழந்தை, விழுவதால் எழுந்து நிற்க தயங்குவதில்லை. போராட்டமும்கூட விழுவதால் எழுந்துநிற்க தயங்கப்போவதில்லை. காரணம் நம்மை வழிநடத்தும் மகத்தான ஒரு வழிகாட்டியை நாம் பெற்றிருக்கிறோம். அந்த மகத்தான தலைவன் மாறாத ஆற்றல் வாய்ந்தவன். புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வாரே, நான் ஆற்றின் திசையை திருப்பிவிடும் பாறாங்கல்லை போன்றவன் என்பதற்கு ஏற்ற வகையில் தமது வாழ்வை செதுக்கி வைத்துக் கொண்ட மாபெரும் ஆற்றலாளன் நமது தேசிய தலைவரின் வழிக்காட்டுதலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறோம். நம்மை முடங்கிப் போக விடாமல் தட்டி எழுப்பி, வீரமூட்டிய தாய்மையின் முழு வடிவம் நமது தேசிய தலைவர். நாம் வீழ்ந்தபோது எழுந்து நில் என கட்டளையிட்ட பெரும் படை தளபதி நமது தேசிய தலைவர். உயிரைவிட மானம் பெரிதென நம்மை மனிதனாய் மாற்றியவர் நமது தேசிய தலைவர். வாழ்க்கை என்பது விடுதலையோடு வாழ்வதற்கு என்பதை விருப்பு வெறுப்பின்றி நம்மிடம் பதிய வைத்தவர் நமது தேசிய தலைவர். அவரின் ஆன்ம பலமே நம்மை தமிழன் என்று அழைக்கும் துணிவை தந்திருக்கிறது. நமது தேசிய தலைவரின் எழுச்சிமிக்க சிந்தனையும், எதற்கும் அஞ்சாத செயல்திறனும், உண்மையை நேசிக்கும் உன்னதமும் நடைமுறையில் நம்மையும் இணைத்து, அழைத்துக் கொண்டு செல்கிறது. ஆகவே, நமது தேசிய தலைவரின் வழிநடத்தல் இந்த நேரத்தில் நமது தேவையாக இருப்பதால் அவரின் சிந்தனைகளிலிருந்து நமது செயலை மறுசுழற்சிக்கு அழைத்துச் செல்வோம். துவண்டுபோகும் காலத்தில் இருந்து துளிரும் காலத்திற்கு மனதை பக்குவப்படுத்துவோம். நாம் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் நமது தோல்விக்கு நமது பிரிவினை தான் மெய்யான காரணம் என்பதை உணர்வோம். பிரிவினையிலிருந்து ஒற்றுமையை நிலைநாட்டுவோம். உலகெங்கும் வாழும் தமிழினம், தமிழர் என்ற ஓர்மை பண்பில் ஒருங்கிணைவோம். தேசிய தலைவர் மீண்டுமாய் வரும்போது, நாங்கள் இணைந்து நிற்கிறோம் என்று நமது குரலொளி சங்கே என முழங்கட்டும். அதை கேட்ட தேசிய தலைவர், புறப்படுங்கள் என்று கட்டளையிடட்டும். அந்த கட்டளை பிறக்கும் நொடியே, நமது தமிழீழம் பிறக்கும் நொடியாகும். அந்த கட்டளை காற்றில் கறையும்போது, நமது குருதியோட்டம் தீக்கனலாய் மாறி நிற்கும். அந்த குரல் காற்றோடு இணைந்து உலகையே கதிகலங்க செய்யும் உச்சத்தை எட்டும். அதற்கான காலம் இதோ, மிக அருகில் இருக்கிறது. நீங்களும் நானும் இணைந்தே ஆற்ற வேண்டிய மகத்தான பணி நம்முன் குவிந்து கிடக்கிறது. அதை அறிவிக்கத்தான் நமது கடந்த கால நிகழ்வுகளின் அசைப்போடல். முள்ளிவாய்க்காலை மீண்டும் நினையுங்கள். உங்கள் செவிகளில் தேசிய தலைவரின் கட்டளையோடு கேட்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக