திங்கள், 3 மே, 2010

ஈழ அகதிகளை மீள அழைக்க சிறிலங்கா முயற்சிக்கிறதா?

இலங்கைத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் நாடு திரும்புவதற்கான ஏதுநிலை அதிகரித்திருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றவாறு அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வன்னிப் பகுதியினது நிலைமைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதையடுத்து போரின் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற இந்த மக்கள் மீளவும் தங்களது ஊர்களுக்குத் திரும்பும் நிலை தோன்றும் என அரசாங்கம் நம்புகிறதாம்.
ஆனால் இந்தியாவின் தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழத் தமிழ் அகதிகளை மீளவும் நாட்டுக்குக் கொண்டுவரும் வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகளை இதுநாள் வரைக்கும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சென்னையிலுள்ள தனது துணைத் தூதரகத்தின் ஊடாக தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகளுடன் சிறிலங்கா இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் சூழல் இருந்தும் அரசாங்கம் இதுவரை நாளும் அவ்வாறெந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இறுதிப் போரின் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 288,514 மக்களுள் ஏப்பிரல் மாத இரண்டாம் வாரமளவில் 82,531 பேர் மாத்திரமே தொடர்ந்தும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறிவிட்டார்கள் அல்லது பிற மாவட்டங்களிலுள்ள அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புமிடத்து அது சிறிலங்காவில் இயல்புநிலையினை ஏற்படுத்த முனையும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும் என அந்த அரச தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதில் சிறிலங்கா அரசாங்கம் ஒருங்கிணைந்த, கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாக ஈழ அகதிகள் தாயகம் திரும்புவது ஆமை வேகத்திலேயே இடம்பெறுவதை அரச தரப்பினர் ஏற்றுக்கொள்கிறார்கள். மீள்குடியேறிவரும் மக்களின் நன்மைகருதி இந்தியா குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவு சீமெந்தினை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. வீடுகளைச் சீரமைப்பதற்காக மீள்குடியேறிவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எட்டு பை சீமெந்து இலவசமாக வழங்கப்படும் என சிறிலங்காவில் செயற்படும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றபோதும் தேவையினைப் முழுமையாகப் பூர்த்திசெய்யும் வகையிலான போதிய வளங்கள் அங்கில்லை என்பதை அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தினது துணையுடன் கடந்த வருடம் 800 ஈழ அகதிகள் நாடு திரும்பியிருப்பதாகத் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கிறார். 2010ம் ஆண்டு இதுவரைக்கும் 400 வரையிலான அகதிகளில் தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருப்பதாகவும் இந்த ஆண்டினது முடிவில் தாயகம் திரும்பியவர்களது தொகை 1000 ஆக அதிகரித்திருக்கும் எனவும் அவர் மேலும் கூறுகிறார். இவ்வாறாக ஈழத் தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடவில்லை. ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்திற்கு அறிவிக்காமல் மேலும் பல அகதிகள் தாமாகவே நாடு திரும்பியிருக்கலாம் என அந்த அதிகாரி தொடர்ந்து கூறினார். இந்த அகதிகள் நாடு திரும்புமிடத்து இயல்பு வாழ்க்கையினைத் தொடரலாம் என்ற, இவர்களது மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்ற உறுதிப்பாடு பொருத்தமான தரப்பினரிடமிருந்து கிடைக்குமிடத்து மேலும் அதிக ஈழத்தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவார்கள் என இந்த அரச அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார். சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பூட்டானுக்குச் சென்றிருந்த சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுக்குழுக்கள் போரினால் இடம்பெயர்ந்தவர்களின் விரைவான மீள்குடியேற்றம் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக