திங்கள், 3 மே, 2010

குடா நாட்டின் அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம்

குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்
.மக்கள் நலன்கருதி தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்றும் இராணுவத்தால் வேஎண்டுகோள் விடப்பட்டுள்ளது. இராணுவம் தான் அனைத்து சமூக சீர்கேடுகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டிவிட்டு அதில் ஈடுபட்டம் வந்துள்ளது. ஆனால் இப்போ அதனை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்க போவதாக கூறுவது. படைகளின் பிரசன்னத்தினை அதிகரித்து தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் குடா நாட்டை வைத்திருக்கவே என மக்கள் கூறுகின்றனர். இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் நோக்கில் யாழ். பிராந்திய படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க யாழ்.நகரில் உள்ள 51 ஆவது படையணித் தலைமையகத்தில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அங்கே அவர் தெரிவித்தவை வருமாறு: போர் முடிவடைந்த பின்னர் குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை படிப்படியாகத் தளர்த்திவந்தோம். மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வசதியாக வீதித்தடைகளை காவலரண்களை அகற்றினோம். மக்களின் சுமூக வாழ்க்கைக்குத் தடையாக இருந்த பல்வேறுபாதுகாப்புச் செயற்பாடுகளையும் நீக்கினோம். மக்கள் தமது பணிகளை சுமூகமாக சீராக மேற்கொள்ள வசதிகள் செய்தோம். ஆனால் கடந்த சில நாள்களாக குடாநாட்டில் உருவாகியுள்ள வன்செயல் சம்பவங்கள் காரணமாகப் பாதுகாப்பு நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காகவும் கடந்த வெள்ளிக்கிழமை பலாலியில் விசேட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் கலந்து கொண்டனர். குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டம் ஒழுங்கைப் பேணவும், உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த மாநாட்டில் வைத்து பொலிஸ் மா அதிபருக்குப் பாதுகாப்புச் செயலர் பணிப்புரை விடுத்தார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் அதேநேரம், அதற்குப் புறம்பாக இராணுவத்தினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் பிரகாரம் * படையினரின் வாகன ரோந்து, நடைரோந்து ஆகியன இடம்பெறவுள்ளன. * வீதித்தடைகளோ, புதிய காவலரண்களோ அமைக்கப்பட மாட்டா. *படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்படும். * முன்பு இருந்தது போன்று கூடுதல் எண்ணிக்கையான படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். குற்றம் புரியும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் ஈ.பி.டி.பியாகவோ, விடுதலைப்புலிகளாகவோ யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இத்தகைய செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுப்பர். அதற்குப் படையினர் உதவியாகச் செயற்படுவர். குற்ற செயல்களின் பின்னால் இருந்து செயற்படுபவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நீதிவானுக்கு விசேட பாதுகாப்பு சாவகச்சேரி மாணவன் கொலை தொடர்பாக விசாரணை செய்துவரும் சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து என்னுடன் கலந்துரையாடினார். அவரது வாசஸ் தலத்துக்கும், அவர் நீதிமன்றம் சென்று திரும்பவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளேன். இப்போது அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பைப் பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக