திங்கள், 3 மே, 2010

மன ஆற்றலின் மன்னன் -கண்மணி

கடந்த ஏப்ரல் 15ந் தேதி தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு அடிப்படை இன அழிப்பின் அடையாளத்தை வரைந்து காட்டியது. “பேசப்படாத இனப்படுகொலை, இலங்கையில் போர் குற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இதில் இலங்கை நடத்திய மாந்த நேய அடக்குமுறைகளைக் குறித்தும், தமிழர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிலரின் சொற்கள் நமது மனங்களை இடியாய் உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜசேந்திர சச்சார் குறிப்பிடும்போது, தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவறுமானால், தமிழர்கள் வேறொரு பாதையை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.



ஆக, உலக வரலாற்றிலே எந்த சூழ்நிலையிலும் தேவைகளை பொறுத்து அமைந்த போர் வடிவங்கள் சிறு மாற்றத்தோடு மீண்டும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதை, செயல்படுத்தியதை நாம் காண்கிறோம். அதே கண்ணோட்டத்தோடு இலங்கையின் அடக்குமுறைகளை குறித்து அமைதி காக்கும் இந்த போராட்டம் மூச்சு வாங்குவதற்காக ஓய்வு எடுத்துக் கொள்ளும் நிலைதானே தவிர, போராட்டம் முடிந்தது என்று உறங்குவதற்கான நேரம் அல்ல. அப்படி உறங்கவும் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறையாளர்கள் இந்த போராட்டம் இல்லாவிட்டாலும்கூட, வரலாறுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு போராட்டங்களை அவர்கள் படித்தறிந்தாவது முடிவெடுக்க வேண்டும். இரண்டும் செய்யாத போது, இந்த ஆட்சியாளர்களின் கரங்களில் உள்ள அரச பயங்கரவாதம் தொடர்ந்து மக்களின் தார்மீக போராட்டத்திற்கு முன்னால் வெற்றி பெறாது, பெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் நிகழ்வுக்குப் பிறகு வருத்தப்படக்கூடிய ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கைகொள்ள வேண்டி வரும்.

வரலாற்றில் நெப்போலியன் என்ற பெயர் இதுவரை யாராலும் மறந்துபோக முடியாத ஒரு மந்திர சொல்லாக பயன்பட்டிருக்கிறது. நெப்போலியன் தமது வாழ்வில் அடிமை தனத்திலிருந்து விடுபடுவதற்காகவே தொடர்ந்து போராடினார். ஆனால், நெப்போலியனுக்கு இப்படிப்பட்ட ஒரு போர் உணர்வை அவனுக்குள் எரிதழலாய் மாற்றி அமைத்தது அவன் மண்ணின் மீது அவன் கொண்டிருந்த அளவில்லா பற்று. இத்தாலிக்கு அருகில் உள்ள கோர்சிகா என்ற தீவு, ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தீவு. கோர்சிகாவில் அப்படி ஒன்றும் வளம் கொழிக்கும் தன்மை இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், அத்தீவு மத்திய தரைக்கடலின் நடுவே இருக்கிற தீவு என்பதால், மத்திய தரைக்கடலில் வந்து செல்லும் கப்பல்களில் வரிவசூலித்து வளமாக இருக்கலாம் என்கின்ற ஒரு காரணம் இருந்தாலும், மற்றொரு காரணம் முதன்மையானது.

அது, அத்தீவுவில் அமர்ந்து கொண்டு கடல்வழியே தம்மீது யாரும் படை எடுத்து வராதபடி பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான். இதற்காகத்தான் பக்கத்தில் இருக்கும் எல்லா நாடுகளும் கோர்சிகாவை தமது நாடாக வைத்துக் கொள்ள விரும்பின. இரண்டு, மூன்று ஆண்டுகள் அல்ல. 30, 40 ஆண்டுகள் அல்ல. பல நூற்றாண்டுகளாக இந்த சின்னஞ்சிறு தீவு வெவ்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மாறி கொண்டே இருந்தது. அது ஒரு அடிமை தேசம் என்கின்ற நிலையிலிருந்து தம்மை உருமாற்றிக் கொள்ள, பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கோர்சிகா மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இத்தாலியர்களோ மிகச் சாதாரணமாக கரப்பான் பூச்சியை தெளிப்பான் கொண்டு அழிப்பதை போன்று கோர்சிகர்களின் போராட்டத்தை ஒடுக்கிப் போட்டார்கள். ஆனால் அதற்காக வாழ்நாள் எல்லாம் அடிமை சங்கிலியை பூட்டிக் கொண்டிருக்க கோர்சிகர்கள் விரும்பியதில்லை. தொடர்ந்து அவர்கள் விடுதலைக்கான போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மாறி மாறி இவர்களை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்களை இவர்களும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இந்நிலையில்தான் உலகையே வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன் கோர்சிகாவில் பிறந்தார். தொடர்ந்து தம்முடைய நாட்டின் வரலாற்றை வாசித்தறிந்தார். தமது நாட்டிற்கான விடுதலை தேவை என்பதை அவன் ஆழமாய் உணர்ந்தான். தமது 16 வயதில் பிரெஞ்ச் அரசின் ராணுவத்தில் பணியாற்றினாலும்கூட, தமது நாட்டின் விடுதலை ஒன்றே அவனுடைய முழுநேர கனவாய் இருந்தது. அதற்காக நெப்போலியன் களமாடிய பல்வேறு நிலைகளை நெப்போலியன் குறித்து வரலாறாக எழுதுவதற்கு நாம் செலவிடலாம். ஆனால் இந்நேரத்தில் இங்கே நாம் பதிவு செய்ய விரும்புவது யாரெல்லாம் தம் மக்களை நேசிக்கிறார்களோ, அவர்களெல்லாம் மாபெரும் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், உலகிற்கு தமது வீரத்தை அடையாளம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். மாந்த குலம் வாழும் வரை அவர்களின் பெயர்கள் தொடர்ந்து உச்சரிக்கும் மந்திர சொற்களாக மாறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வரலாற்று குறிப்பை நாம் சொல்வதற்கு காரணம், பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த கோர்சிகாவின் நெப்போலியன் உலகையே தமது காலடிகளுக்குள் கொண்டுவர நடத்திய போர் பயணம் இன்றுவரை யாராலும் மறக்க முடியவில்லை. ஆகவே, சில பத்தாண்டுகள் அடிமைகளாக சிங்கள பேரினவாதத்தின் கரங்களில் சிக்கி பிழியப்பட்ட அடையாளங்களாக இருக்கும் தமிழ் உறவுகள் தமது விடுதலைக்கான வீச்சு நிறைந்த மனநிலையை இந்த நேரத்தில் மீண்டும் கைகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் நெப்போலியனை இங்கே நினைவுப்படுத்தி இருக்கிறோம். நெப்போலியனை காட்டிலும் மக்கள் மீது அக்கறையும், உலக மாந்தத்தின் மீது மரியாதையும், உலக மொழிகளின் மீது பற்றும் கொண்ட ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவன் நமக்கு இந்த வரலாற்றால் வார்த்தெடுக்கப்பட்டு, வாரி வழங்கி இருக்கிறது.

அந்த தலைவன் விரல் நீட்டிய திசை வெற்றி என்று எக்காளம் ஊதுகிறது. அந்த தலைவன் விழி பார்த்த இடங்கள் தமிழனின் விளைநிலமாய் மாறி நின்றது. அந்த தலைவன் வார்த்தைகளிலிருந்து புறப்பட்ட வசீகரம், உலகையே தமது நிகழ்வுகளாய் மாற்றி அமைத்தது. ஆனால் அடக்குமுறையாளர்கள் ஒன்றிணைந்து தமது அடையாளத்தை அழிக்கும் அவலநிலைக்கு, கேடுநிலைக்கு வந்தார்களே! அங்கேயும் தமது மக்களின்மேல் கொண்ட அன்பை அந்த தலைவன் வெளிப்படுத்தினார். அந்த மண்ணின் மீது கலாச்சார பண்பாட்டு சீரழிவு நிகழ்த்தப்படக்கூடாது என்பதற்காக அதை பக்குவமாக ஒரு குழந்தையை தாய் சீராட்டுவதுபோல், சீராட்டி வளர்த்த எமது தேசிய தலைவர், தற்சமயம் அவரின் கட்டளைகள் இல்லாத காரணத்தினால் அவை சீரழிந்து கொண்டிருப்பதாக நாம் அறிகிறோம்.

தில்லியில் நடைப்பெற்ற கருத்தரங்கில் இதை பெரியார் திராவிட கழக தலைவர் தா.செ.மணி மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அவர் தமது உரையில், “இலங்கை ஒரு முன்மாதிரி இனப்படுகொலையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது. சாட்சிகளற்ற மிகப்பெரும் இன அழிப்பை நடத்தி காட்டியிருக்கிற இந்த முன்னெடுப்பை உலக நாடுகள் உலகில் மாந்தத்தை ஒடுக்கும் பேராதிக்க அரசுகள் பின்பற்றக்கூடிய பெரும் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைவிட அழுத்தமான அவருடைய வார்த்தைகள் என்னதென்றால், “இலங்கை அரசு தமிழர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்களின் பண்பாட்டை, நிலத்தை, கல்வியை, வாழ்வியல் ஆதாரங்களை என அனைத்தையும் அழித்திருக்கிறது” என்பதுதான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆக, நாம் எங்கே நமது போராட்டத்தை நிறுத்தினோமோ, அங்கிருந்து அந்த போராட்டத்தை நடத்துவதற்கு நம்மை தயாரித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நம்முடைய எண்ணங்கள் ஒருசேர ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

வாழ்வியல் கட்டுமானம் என்பது விடுதலையின் உணர்வுகளிலிருந்து தோன்றக்கூடியவையாக இருக்க வேண்டும். விடுதலையே வாழ்வியலின் பெரும் ஆதாரமாகும். விடுதலையை தவிர்த்து வாழ்வு என்பது பிணத்திற்கு கிடைக்கும் மரியாதையை விட குறைவானதுதான். ஆகவேதான் பல நூற்றாண்டுகளாக மாந்தகுலம் தமது விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே மாந்தம் போராட்டத்தை நிறுத்தியது கிடையாது. அது தம்மை அடைகாத்துக் கொள்வது புதிய உயிரினை படைப்பதற்காகத்தான் என்பதை நமக்கு பல்வேறு சான்றுகள் எடுத்துரைத்திருக்கின்றன. தமிழீழ போராட்டமும் கூட அந்த அடிப்படையிலே இப்போது அடைகாக்கப்படுகிறது. நமது தேசிய தலைவரின் கட்டளைக்காக அது காத்திருக்கிறது. நமது போராட்டம் ஒருபோதும் தோல்வியுறாது என்பதற்கான பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு முன்னால் பரந்து விரிந்திருக்கிறது.

ஆகவே, தயக்க உணர்ச்சி கொள்ள வேண்டாம், தடுமாற வேண்டாம், கோர்சிகா என்ற தீவு மாபெரும் பிரெஞ்ச் மற்றும் இத்தாலி அடக்குமுறையாளர்களுக்கு எதிராக நிகழ்த்திய போராட்டங்களை முடிந்தால் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். அதோடு ஒப்பிடும்போது நமது போராட்டம் ஒருபெரும் நிகழ்வு அல்ல. தமிழர்கள் அறிவாளிகள், அதிநுட்ப நுண்ணறிஞர்கள், பண்பாட்டியல் மற்றும் அறிவியல் தளங்களில் சரியான தடங்களை கண்டறிந்தவர்கள். ஆனால் நாம் ஒன்றிணைய தவறியதே நம்மை இப்போராட்ட நிகழ்வுகளிலிருந்து மிக தூரத்திற்கு தள்ளியிருக்கிறது. ஆகவே தேசிய தலைவரின் கட்டளை பிறப்பதற்கு முன்னால் நாம் ஒரே கட்டாக நிற்க உறுதி எடுப்போம்.

கடந்த ஆண்டு இந்த மே திங்கள் குருதி தெளிப்பின் நாட்களாக இருந்தது. குவலயமே அந்த படுகொலைகளை கண்டு பரிதபித்து நின்றது. நாமெல்லாம் உண்ண மனமின்றி, உறங்க உணர்வின்றி தவித்துக் கொண்டிருந்தோம். அந்த காலங்களை அசைப்போடுங்கள். நமது விடுதலையின் தேவை உங்களை உலுக்கி எடுக்கும். எந்த நிலையிலும் உங்களை நீங்கள் தவிர்த்துவிடாதீர்கள். நமக்கான போராட்டம் நாம் தான் நடத்த வேண்டும். நமக்கு வாய்த்த தலைவனைக் கொண்டு நாம் இந்த உலக அரங்கிற்கு நம்மை அடையாளப்படுத்துவோம். நாம் விழப்போவதில்லை. எழுந்து நிற்கும் உலக மக்களின் ஒரு இனம் என்பதை ஓங்கி உறக்க சொல்லுவோம். இந்த உலகில் இரண்டு ஆற்றல்கள்தான் ஆண்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, கருவி ஆற்றல். மற்றொன்று, மன ஆற்றல். காலப்போக்கில் மன ஆற்றலின் முன்னே கருவி ஆற்றல் அடையாளம் தெரியாமல் மழுங்கிப்போய்விடும் என்று மாவீரன் நெப்போலியன் கூறியதை நினைத்துப் பார்ப்போம். நமது மன ஆற்றலுக்கு முன்னால் இக்கருவி ஆற்றல்கள் தூள் தூளாக்கப்படும்.

நமக்கான தமிழீழத்தில் பறக்கும் புலிக்கொடியில் இந்த பார் மகிழ்ந்து கர ஓசை எழுப்பும். அந்த நாளுக்காய் நீங்கள் அணி திரளுங்கள். இதைத்தான் எமது தேசிய தலைவர் ஆன்ம பலமே உயர்ந்ததென அடையாளப்படுத்தினார். ஆயுத பலத்தைவிட, ஆன்ம பலத்தை உயர்த்திப்பிடித்தார். அவர் மன ஆற்றலின் மன்னனாய் விளங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக