சனி, 22 மே, 2010

தேசிய தலைவர் கற்றுத் தந்தது ..........

தேசிய தலைவர் கற்றுத் தந்தது நாமும் கதை சொல்லி வெகு நாட்களாகி விட்டது. என்னவோ தெரியவில்லை நமது கிராமங்களில் கதை சொல்லி நமக்கு சில செய்திகளை புரிய வைக்கிறார்கள். அந்த கதைகள் நமது மனங்களில் இறுதிவரை தங்கி வருகிறது. இன்று போகும் தமிழீழ விடுதலை அரசியல் போக்கு நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. விடுதலை போராட்டத்திற்கான வரலாற்று காரணங்கள், போராட்டம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து அது கருவி போராட்டமாக உருமாறிய காலக்கட்டங்கள்.
 அதிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட தமிழனின் மானம், மரியாதை, உரிமை, தமிழனுக்கான வாழ்வடையாளம், அவனுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகியவைகள் தற்காலிகமாக ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றன. தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் ஆணிவேரான மேதகு தேசிய தலைவர் தமது கட்டளைகளை எங்கிருந்து பிறப்பிக்கப் போகிறார் என்ற சேதி இதுவரை எவருக்கும் புரியாத புதிராக இருப்பதால், எல்லோரும் ஒரு கதை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது எம் இன மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இதனால் நாம் இத்தனை காலம் நிகழ்த்தி வந்த போராட்ட வீரியம் குறைக்கப்படலாம். அதைவிட மேலாக எமது மக்களின் உரிமைகளுக்காக தமது இன்னுயிரை ஈந்து களம் கண்ட மாவீரர் லெனின் இறுதிவரை களத்தில் இருந்த கண்மணிகளும், இன்று அளவில்லா துன்பத்தை பகைவனிடம் பெற்று வருவதை அன்னிய நாட்டு ஊடகங்கள் காட்சிகளாக, செய்திகளாக வெளியிடுவதைப் பார்க்கும்போது நமது குருதி குறைந்து போனதைப் போன்ற நிலை ஏற்படுகிறது. நாக்கு வறட்சியால் ஒட்டிக் கொள்கிறது. நமக்கே புரியாத ஆவேச உணர்வு நம்மை சிலிர்த்தௌ செய்கிறது. சில நாட்களுக்கு முன்னால் 4 சேனல் என்ற ஊடகம் வெளியிட்ட ஒரு படம் நமது நெஞ்சை உறைய செய்கிறது. அந்த வீரப்புலி நமது மீட்புக்கான களத்திலிருந்ததைத் தவிர, பெருங்குற்றம் எதையும் நிகழ்த்திவிடவில்லை. நமது விடுதலை ஒன்றுதான் அந்த வீரத் திருமகனின் உணர்வாக இருந்திருக்க வேண்டும். அவனை கத்தியால் கிழித்து கொன்றுபோட்ட கோரம் நமது மனங்களை சில்லிட வைக்கிறது. மூளை நரம்புகளில் இனம் தெரியா அனல் சுவடுகள் அள்ளித் தெளிக்கிறது. இதையெல்லாம் நாம் நினைத்து நெஞ்சம் பொங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் தலைவர் இல்லாத திசையை காட்டி, தாம் தான் தலைவன் என்று நிரூபித்துக் கொள்வதற்காக பல்வேறு பொய்களை புதிய புதிய தலைவர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஒரு ஊரிலே பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வெகு நாட்களாக கொக்கு இறைச்சி சாப்பிட கொள்ளைப்பிரியம். அதை தம் சமையல் காரனிடம் தெரிவித்து, இன்று என்ன செய்வாய் என்று தெரியாது. ஆனால் நான் கொக்கு இறைச்சி சாப்பிட்டேத் தீர வேண்டும் என்று கட்டளையிடுகிறார். சமையல்காரனும் குளக்கரைக்கு சென்று காத்திருந்து கொக்கு ஒன்றை பிடித்து வருகிறான். பிடித்து வந்த கொக்கை இறைச்சியாக்கி சமைத்து, சுவை பார்க்கும்போது அந்த இறைச்சியின் சுவை அவனை அந்த இறைச்சியின் சுவைக்கு அடிமையாக்கி விடுகிறது. ஆகவே, கொக்கின் கால் ஒன்றை எடுத்து சாப்பிட்டு முடித்துவிடுகிறான். பண்ணையார் வருகிறார். சாப்பாடு பறிமாற சமையல்காரன் மேசைமீது கொக்கின் பாகங்களை தனித்தனியே பிரித்து வைக்கிறான். உடல், இறக்கை, கால்கள் என. மிக சுவையாக இருந்த கொக்கு இறைச்சியை சாப்பிட்ட முடித்தப் பின்னர், சமையல்காரனைப் பார்த்து பண்ணை கேட்டான், இறைச்சி மிக சுவையாக இருந்தது. ஆனால் நான் சாப்பிட்ட கொக்கிற்கு ஒரு கால் மட்டும் தான் இருந்ததே. ஏன் என்று? அடடா... மாட்டிக் கொண்டோமே என்று பயந்த சமையல்காரன், ஐயா கொக்கிற்கு எப்போதும் ஒருகால் தான் இருக்கும் நீங்கள் பார்த்ததில்லையா என்று பொய் சொல்கிறான். பண்ணையார் இல்லையே, எல்லா பறவைகளுக்கும் இரண்டு கால்கள் இருக்குமே என்று சொன்னபோது, அவன் முயலுக்கு மூன்று கால் என்பதைப் போன்று கொக்கிற்கு ஒரு கால் என சாதிக்கிறான். பண்ணையார் அதை நிரூபி என்று சொல்லியவுடன், வாருங்கள் குளக்கரைக்குப் போகலாம் என்று ஒரு மாலை வேளையில் பண்ணையாரை குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறான். குளக்கரைக்கு அருகில் பண்ணையின் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வேலைக்காரன் பண்ணையாரைப் பார்த்து, ஐயா! தாங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க, வந்ததற்கான காரணத்தை பண்ணையார் கூறுகிறார். ஆகா... சரியாக மாட்டிக் கொண்டான் சமையல்காரன். நமக்கு சோறுபோட்டால் கறி தரமாட்டான். குழம்பு இருந்தால் கூட்டு தரமாட்டான். இவனை மாட்டிவிட ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைத்து, அவனும் உடன் சேர்ந்து குளக்கரைக்கு செல்கிறான். குளத்தில் இருக்கும் கொக்குகள் ஒரு காலை எடுத்து மேலே ஊன்றி, மறு காலால் அழுத்தப்பதித்து நின்று கொண்டிருந்தன. சமையல்காரன் சொன்னான், ஐயா பார்த்தீர்களா, கொக்கிற்கு ஒருகால் தான் இருக்கிறது என. இதைப் பார்த்த வேளைக்காரன் ஒரு சிறிய கல்லை எடுத்து கொக்கை நோக்கி எறிந்தான். கொக்கு பறக்கும்போது இரண்டு கால்கள் இருந்ததைக் கண்ட பண்ணையார், சமையல்காரனை நோக்க, சமையல்காரன் தலைகுனிந்து நின்றான். இப்படித்தான் தமிழர்கள் என்னும் பண்ணையார்களைப் பார்த்து, தமிழீழப் போராட்டத்தை ஒற்றைக்கால் கொக்காக வர்ணிக்க, திடீர் தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் கதை, திரைக்கதை அமைத்து புதிது புதிதாக உரையாடல்களை தயாரித்து, அதை ஊடகங்களுக்கு அள்ளி வழங்குகிறார்கள். அந்த ஊடகங்களும் ஆமாம்! ஒற்றைக் காலில் தான் கொக்கு இருக்கிறது. அதை கண்டவர்கள் சொன்னார்கள் என வரிவரியாக வரிந்து கட்டி எழுதுகிறார்கள். ஆனால் திடீரென ஒருநாள் மக்களாக அதன்மீது கல்லெறிந்து பார்த்து, அதற்கு இரண்டு கால் என்று கண்டுபிடித்தப் பின்னால், இப்படி திடீர் தலைவர்களும் உளவுத்துறையின் அடிமைகளாக, பணத்திற்காக ஏவல் செய்யும் பண்பாடற்ற ஊடகங்களும் தலைகவிழ்ந்து நிற்கும். அதை எந்த ஒரு ஆற்றலாலும் மாற்ற முடியாது. காரணம், நமது போராட்டத்தின் அகப்புறத் தன்மைகள் அவ்வளவு ஆற்றல் வாய்ந்தது. இதுவரையில் இயக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளையும், அதன் பாதுகாப்பு தன்மைகளையும், ரகசியங்களைக் கட்டியாளும் திறனையும் எதிரி இன்றுவரை பார்த்து வியந்து கொண்டிருக்கிறான். எமது தேசியத் தலைவரின் மூளைக்குள் மட்டும்தான் பலத்திட்டங்கள் கட்டி, பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அவை தேவைக்கேற்றவாறு பரவலாக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, திட்டங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட முழு உருவம் இதுவரை எமது களப்போராளிகளுக்கே தெரிந்தது கிடையாது என்பதே எதார்த்தம். உண்மையும் கூட. ஒரு செயலை இயக்கம் செய்ய திட்டமிடும்போது, ஒரு பகுதிக்கான பணியை செய்வதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்த பகுதியை தவிர்த்து, வேறு என்ன நிகழப்போகிறது என்ற தகவல் எள்மூக்கின் முனை அளவுக்கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதேப்போன்றே, அடுத்தக்கட்டப் பணியை செய்பவர்களுக்கு, அவர்கள் செய்யும் பணியை தவிர, அதற்கு முன்னரோ, அதன் பின்னரோ நடக்க இருப்பவை என்னதென்று தெரியாமல் அவர்கள் பணியாற்றுவார்கள். இதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எமது தேசிய தலைவர் அளவிட முடியா ஆற்றலோடு நடத்தி வந்த அற்புத காரணமாகும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதன் உளவுப் பிரிவு நிகழ்த்திய பாரிய செயலாற்றல்கள் எதிரியின் எண்ணங்களுக்கு இதுவரை சவாலாகத்தான் இருந்திருக்கிறதே தவிர, எதிரியும் எண்ணி எண்ணி வியந்துதான் பேசியிருக்கிறானேத் தவிர, அதன் உள்ளடக்கம் என்னதென்று இதுவரை அவனால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அது எவ்வாறு நிகழ்கிறது என்று உணர்ந்து கொள்ளவும் முடியவில்லை. காரணம் இது தலைவனின் மூளையில் உதித்த அற்புத வடிவங்கள். இது, முழுக்க முழுக்க விடுதலைக்கான போர் முறைகள். ஆகவே எந்த இடத்திலும் இது சிதைவடையக்கூடாது என்பதிலே எமது தேசிய தலைவன் தெளிவாக இருந்தான். அந்த தெளிவின் காரணத்தால், ஒவ்வொரு திட்டமிடலுக்கும் ஒரு உள்ளார்ந்த ஆன்ம ஆற்றலின் தேடலாக அந்த திட்டங்கள் இருந்தது. எனவே, இப்போது புதிது புதிதாக வரும் அறிக்கைகளை நாம் புறந்தள்ள வேண்டும். இன்று இந்த போராட்டத்தின் வடிவம் தமிழ்நாட்டைவிட, புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளின் கரங்களில்தான் பிண்ணி பிணைந்திருக்கிறது. புதிது புதிதாக வரும் செய்திகளை நாம் அடையாளம் கண்டு, நமது தேசிய தலைவரின் அரசியல் நகர்வை கடந்த கால பட்டறிவின் மூலம் தெளிவாக்கிக் கொண்டு, நாம் முனைப்போடு செயல்பட வேண்டும். இப்போது உலகெங்கும் இரத்த வெறி பிடித்த ராசபக்சேவின் முகம் நோக்கி விரல்கள் நீண்டிருக்கின்றன. அதை நாம் செழுமைப்படுத்த வேண்டும்.அந்த பெருங்கொடுமையாளன் ஒரு இன அழிப்பு குற்றவாளி என்பதை நிரூபிக்க, நமது செயல்கள் ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், நமது விடுதலைப் போராட்டத்தின் அடையாளத்தை யாராலும் அழித்தொழிக்க முடியாது. காரணம், எமது தேசிய தலைவரின் தொலைநோக்கு, அவர் நிகழ்த்திய ஒவ்வொரு நகர்வும் ஆவணப்படுத்தப்பட்டது. அவை உலகெங்கும் பரவலாக பதிவு செய்யப்பட்டது. ஆகவே, அவர் கற்றுத் தந்த அதே வடிவத்தில் நமது போராட்டங்களையும் நாம் அமைக்க வேண்டும். நம் இன அழிப்பிற்கு யாரெல்லாம் துணைபோனார்களோ, அந்த குற்றவாளிகளை நாம் சுட்டிக்காட்டி, இந்த உலக நீதிமன்றத்திற்கு முன்னால் தண்டனை பெற்றுத் தர வேண்டும். நமது இனத்தின் வரலாற்றை, நமது இனத்தின் குருதியை உடல் முழுக்க பூசிக் கொண்ட சிங்கள வெறியர்களின் அநியாயங்களை நாம் வெளிகொணர்வதற்கான தொடர் போராட்டங்களை அமைக்க வேண்டும். நாம் வீச்சோடு நடத்தும் போராட்டங்களை முடக்கிப் போடவே பல மூலைகளிலிருந்து சில புதிய சக்திகள் முளைக்கிறது. அதை முலையிலேயே கிள்ளி எறிவதின் மூலம் எமது தேசிய தலைவர் இனி வரும் காலத்தில் ஆளப்போகும் அதிகார பீடத்தை கட்டி அமைப்பதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும். இதை தவிர்த்து, எந்தவித சலனங்களுக்கும் நமது மனம் உள்ளாகக்கூடாது. இதுதான் நமது வெற்றிக்கு துணையாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக