வெள்ளி, 10 டிசம்பர், 2010

இசைப்பிரியா படுகொலை, அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் - காமாட்சி துரைராஜு (மலேசியா பஹாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி)

ஷோபா என்ற இசைப்பிரியாவை சரண் அடைந்த பிறகும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற செய்தி, சிங்கள மனித மிருகங்களின் கொடூரமான செயலை காட்டுகிறது. ஒரு போர் வீரர் என்று கூட பார்க்காமால், அவரை கொன்ற செய்தி பலரின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. அதிலும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண்மணியை இப்படியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது?



ஆண்களின் பலவிதமான அட்டூழியங்களுக்கு ஆளாகும் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து போர் செய்யும் இடங்களில் கூட இவ்வாறான செயல்களுக்கு ஆளாவது, இலங்கை அரசாங்கத்தின் எல்லை இல்லா கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.


அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் ஆணவங்களை ஒதுக்கி பெண் என்ற அடிப்படை கொள்கையை கையில் எடுத்து, ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்தின் மனிதான்மையற்ற இந்த செயலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை உலக வாழ் பெண்கள் ஆதரிப்பார்களோ இல்லையோ ஆனால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பெண்களும், பெண்கள் இயக்கங்களும் முழுமையாக வலியுறுத்த வேண்டும். இசைப்பிரியாவை போல மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற உண்மை மறைத்தாலும் இப்பொழுது தெரியவந்துள்ளது.


பெண்கள் பொதுவாக மனிதாபிமானமற்ற செயலை பார்த்ததும் ஏற்படும் அந்த தார்மிக கோபம், இலங்கை அரசாங்கத்தின் எதிராக வெளிபடுத்தவேண்டும். தமிழ் பெண்கள் வீரத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு சமமாக நின்று போர் புரியும் குணம் உள்ளவர்கள் என்பதனை ஈழத்தில் வாழும் பல உடன் பிறவா சகோதரிகள் தெளிவுபடுத்திவிட்டனர். இவர்கள் அல்லவா வீரத் தமிழச்சிகள்.


ஈழத்தில் வாழும் தமிழர்கள் தனது தனிமனித மேம்பாட்டுக்கு போர் செய்யவில்லை. அவர்களின் உரிமை பறிக்கப்படுவதினால் போர் முனையில் நிற்கிறார்கள். இதில் ஆண் பெண் குழந்தைகள் என்று பாராமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? போர் நெறி என்பது கிடையாதா? இலங்கை அரசாங்கத்தின் எல்லையற்ற இந்த செயலை உலக முழுவதிலும் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக